அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன. நீலகண்ட தீக்ஷிதர் என்னும் மஹாத்மா சிவலீலார்ணவம் என்று பரமேஸ்வரனின் திருவிளையாடல்களை ரசித்து ரசித்து எழுதியிருக்கிறார். அதில் ஒரு ஸ்லோகத்தில் சிவபெருமானைப் பார்த்து விளையாட்டாக நிந்தா ஸ்துதிபோல் கேட்கிறார். பிட்டுக்கு மண் சுமந்த லீலையைச் சொல்லும்போது, ஹே! பரமேஸ்வரா! நீ ஒரு பக்ஷபாதி. ஏமாற்றுகிறாய். எப்படித் தெரியுமா? அரசன் உன் முதுகில் அடித்தபோது அனைவர் முதுகிலும் அடி விழுந்தது. ஆனால், நீ பிட்டைச் சுவைத்தபோது அனைவர் நாவிலும் தித்தித்ததோ? பிட்டு மட்டும் உனக்கு. அடி எங்கள் அனைவருக்குமா? என்று வம்பிழுக்கிறார். பரிகளனைத்தும் நரிகளானபோது, மணிவாசகரை அரசன் சிறையிலடைத்தான். பரமேஸ்வரனின் ஒரு கையில் அக்னியும், தலையில் நீரும் இருப்பதால், சிவனடியாரைச் சிறையிலடைத்தற்காக வெகுண்டு வைகையில் வெள்ளத்தைக் கிளப்பிவிட்...