க்ருஷ்ணமாதுரி - 101


உன் குழலோசை தெளிவாய்க்
கேட்கவேண்டும் என்பதால்
காற்றை
மெதுவாய் வீச
உத்தரவிட்டிருக்கிறேன்.

உன் வரவை
அறிவிக்கும்
நூபுர த்வனி
கேட்க
யமுனையும்
சத்தமின்றி
அமைதியாய் நடக்கிறாள்.

நீ இவ்வனத்தில் நுழையும்போது
கூவச்சொல்லி
குயிலை
எல்லையில்
நிறுத்தியிருக்கிறேன்.

நிலவை
நீ வந்தபின்பு
யாரும்
பார்க்கமாட்டார்களாம்.

அதனால்
நீ வருவதற்குள்
வானில்
பட்டொளி வீசி
ஒரு சிற்றுலா செல்வேன்
என்கிறது.

அதன்
கொட்டம்
அடங்குமாறு
சட்டென்று
இவ்விடம் வா...

Comments