நாமச்சுவை... (17)

எப்போதும்
என்னோடு இருக்கிறாய்!
எழும்போதே 
என்னுள் இசையாகிறாய்!

இதயத் துடிப்பை 
உன் தாளமாக்கினாய்!
வாய் திறந்தால்
வார்த்தைகளுக்கு முன்னால்
ஓடி வருகிறாய்!

திசை தெரியாமல்
தவிக்கும் நேரத்தில்
சேருமிடத்தின் அரசவீதி காட்டுகிறாய்!

கயவர்களின் களிப்பேச்சில்
மயங்கும் நேரம்
கண்ணுக்குத் தெரியாமல் 
மனத்தில் கல்லென உறைகிறாய்!

ஆபத்துகள் அனைத்தும்
உன் வரவால்
சம்பத்துகளாகின்றன..

உருவமில்லையானாலும் என்னுள்
உணர்வாய்க் கலந்திருக்கிறாய்!

என் இனிய இறைநாமமே!
உன்னோடு
வாழ்தல் இனிது!

<<Previous    Next>>

Comments